Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அறை ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

செப்டம்பர் 08, 2021 02:18

ஜார்கண்ட்: ஜார்கண்ட் சட்ட்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இக்கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார்.

இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பாஜக தவிர மற்ற கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இடம் ஒதுக்கும்படி சபாநாயகர் ரபீந்தரநாத் மஹ்தோவிடம் கோரினர்.

ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த சபாநாயகர் மஹ்தோ, அவர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை கட்டிடத்தின் எண் டி.டபில்யு 348 அறையை ஒதுக்கினார். இதற்கான உத்தரவை துணை செயலாளர் நவீன்குமார் வெளியிட்டார். ஆனால், இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தங்களுக்கும் அனுமன் கோயில் கட்ட வளாகத்தில் இடம் ஒதுக்கக் கோரினர்.

இந்த சூழலில் பைரவ் சிங் என்பவர் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், " பொதுமக்கள் பணத்தில் இதுபோன்று குறிப்பிட்ட பிரிவினருக்காக இடம் ஒதுக்கமுடியுமா, கோயில் ஏதும் கட்டமுடியுமா. சபாநாயகர் இடம் ஒதுக்கீடு தவறான முன்னுதாரணம். சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் கோயி்ல். இது தனி நபரின் சொத்து அல்ல. ஆதலால் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

ஜார்கண்டின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பாபுலால் மராண்டி கூறுகையில், ‘‘சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் கோயில்போன்றது. இதை ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக மாற்றிவிடக் கூடாது. இதன்மூலம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒரு தவறான கலாச்சாரத்துக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், பாஜக சார்பில்போராட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்